உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது என்றுதான் நான் சொல்லுவேன். அது மனைவியாக இருக்கட்டும், மகளாக இருக்கட்டும் அல்லது தோழியாக இருக்கட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆண்கள் போல எதையுமே பெண்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு உடனே செய்வதில்லை என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால், கோபம்?? அதுவும் எப்போது வரும் எனக் கணிப்பது மிகவும் கஷ்டம்.
மனைவிக்கு நாம் என்ன வாங்கிக் கொடுத்தாலும் ஏற்படாத ஒரு சந்தோசம், அவர்கள் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் எனக்கூறும்போது, உடனே அனுப்பி வைத்தால் வருகிறது. அதே போல் மனைவி என்ன சமைத்தாலும், ரொம்ப ருசியாக இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அவர்கள் சந்தோசத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு, மனைவிக்கு என்றல்ல, பொதுவாக பெண்களுக்கு எப்போதெல்லாம் கோபம வரும் என்பது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. சில சமயம், ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது, கோபப்பட வேண்டிய சமயத்தில் கோபப்படாமல் விலகிப்போவார்கள். அதே சமயம் சாதாரண விசயம் என்று நீங்கள் நினைக்கும் விசயத்திற்கு அவர்களுக்கு கோபம் அதிகமாகி விடும். ஆனால், ஒரு உண்மை எனக்கு நன்றாக புரிந்தது. எந்த பெண்ணும் தன் அம்மா வீட்டைப் பற்றி கணவன் மட்டமாக பேசுவதை அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்கள் அவ்வாறு பேசினால், நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொறுத்துப்போவது அடங்கிப்போவதாக அர்த்தம் ஆகி விடாது, ஆனால், சண்டையை வளர்க்காது. ஆனால், இந்த மாதிரி சிறு சிறு சண்டைகள் இருந்தால்தான், குடும்ப வாழ்க்கையே ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
என்னை நல்ல முறையில் செதுக்கியதே நிறைய பெண்கள்தான். அம்மாவில் ஆரம்பித்து, அத்தை, அக்கா, தங்கை, தோழிகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். இப்படி பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் எனக்குள்ளும் ஒரு முரண்பாடு இருக்கிறது. என் தங்கையின் மறைவிற்கு பின் யாராவது, என்னை "அண்ணா" என்று கூப்பிட்டால் எனக்கு பிடிப்பதில்லை. அதை நான் வெறுக்கிறேன். அப்படி கூப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? என்பது என் வீட்டினரின் வாதம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒரு பாதுகாப்புக்காக அப்படி கூப்பிடுகிறார்களோ? என்று.
சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. எனது அனைத்து மெயிலில் படித்து உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஒரு தோழி. முதலில் மெயிலில், பிறகு போனில். பிறகு அவர் ஏதோ போட்டோ அனுப்ப போக, நான் அதற்கு பதில் அனுப்ப போக, அவர் உடனே நீங்கள் நல்லவரா, இல்லை கெட்டவரா? அண்ணா? என்றார். பிறகு அண்ணாவிற்கான விளக்கத்தினை கொடுத்தேன். பிறகு வழக்கம் போல் மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பிரச்சனை என்று கூறியதால், அதற்கு வேண்டிய உதவிகளை நண்பர்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன்.
அப்படிப்பட்ட நேரத்தில், நான் அலுவலக வேலையில் பிஸியாக இருந்த சமயத்தில், அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. நான் என்ன எழுதுகிறோம் எனத்தெரியாமல், யாருக்கோ எழுத வேண்டியதை அவருக்கு எழுதி, அவர் என்னை தவறாக புரிந்து கொண்டு, எனக்கு மெயில் அனுப்புதை, பேசுவதை நிறுத்தி விட்டார். ஏன், என்ன? ஆயிற்று என ஒரு விளக்கம் கூட கேட்கவில்லை. ஆண்கள் எல்லாருமே ஒரே மாதிரிதான் என நினைத்து விட்டார் போலும். சடாரேன, தொடர்பை துண்டித்துக்கொண்டவர், இவ்வளவு நாள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று நினைக்கிறாரா? தெரியவில்லை.
இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் சரிதான் போல.
அதனால்தான் கூறுகிறேன், "உலகத்திலேயே மிகவும் புரிந்து கொள்ள முடியாத விசயம் ஒன்று உண்டு என்றால் அது பெண்களின் மனது" என்று.
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment