"மத்திய, மாநில அரசு துறைகள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்ச முறைகேடுகள் மலிந்துள் ளன. "கரன்சி வெறி'யுடன் அலைவோரை வேட்டையாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்கின்றனர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள். அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் கேட்கும் லஞ்சதொகையை கொடுத்து எப்படியாவது காரியம் சாதிக்கவே பலரும் முற்படுகின்றனர். லஞ்சம் தர இயலாதவர்கள் புலம்பியபடி முடங்கிவிடுகின்றனர்.
லஞ்ச அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஏஜென்சிகளை அணுகுவதில்லை; லஞ்ச லாவண்யம் பெருக இதுவும் முக்கிய காரணம். மாநில அரசு துறைகள் மற்றும் அரசு சார் நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு எதிரான லஞ்ச புகாரை, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்கிறது. இதன்படி, இரு மாதங்களில் (ஆக., மற்றும் செப்.,) தமிழகம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் துணை தாசில்தார், அரசு உதவி வக்கீல், போலீஸ் இன்ஸ்பெக்டர், மின்வாரிய இன்ஜினியர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு துறைகளில் பணியாற்றும் லஞ்ச பேர்வழிகளுடன் ஒப்பிடுகையில், கைதான நபர்களின் எண்ணிக்கை மிக சொற்பமே என்கிறது, லஞ்ச ஒழிப்புத் துறை.
லஞ்சம் பெறுதல் மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மூன்று விதமாக கையாளுகிறது. முதலாவது, கைது நடவடிக்கை; இரண்டாவது, விரிவான விசாரணை; மூன்றாவது, திடீர் சோதனை. கைது நடவடிக்கை: லஞ்ச அதிகாரிகளை கைது செய்ய, பாதிக்கப்பட்டவர் எழுத்து மூலமான புகாரை லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளிக்க வேண்டும். அதிகாரிகள் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, ரசாயனம் தடவிய கரன்சி நோட்டுக்களை மனுதாரரிடம் அளிப்பர். அரசு சாட்சிகளை உடன் அழைத்துச் செல்லும் மனுதாரர், அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் கைமாறியதும், அதிகாரி கைது செய்யப்படுவார்.
விரிவான விசாரணை: லஞ்சத்தில் "திளைக்கும்' அதிகாரிகள் குறித்து சுயமாகவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு, சொத்து பட்டியலை ரகசியமாக சேகரித்து, விரிவான அறிக்கை தயாரிக்கும். பின் இந்த அறிக்கை, மாநில அரசு வழியாக தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்படும். உரிய விசாரணைக்கு பின், சொத்து குவிப்பு அதிகாரி மீதான நடவடிக்கையை தீர்ப்பாயம் முடிவு செய்யும்.
திடீர் சோதனை: பத்திரப்பதிவு, வணிகவரி, ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகளவில் புரளுவதாக புகார் எழுந்தால், மாவட்ட கண்காணிப்பு குழுவை உடன் அழைத்துச் சென்று, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துவர். கணக்கில் காட்டப்படாத பணத்தை கைப்பற்றி, மேலிடத்துக்கு அறிக்கை அனுப்புவர். அதன்பின், சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்.இந்த மூன்று விதமான
நடவடிக்கைகளில், கைது நடவடிக்கை மட்டுமே, "மீடியா'க்கள் மூலமாக வெளியாகும். மற்ற இரு நடவடிக்கைகள் மிக ரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுவதால் பெரும்பாலும் வெளியுலகுக்கு தெரிய வாய்ப்பில்லை.
இம்மூன்று விதமான நடவடிக்கையிலும் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியம் என்கிறது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை. இதே போன்று, மத்திய அரசு துறைகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில், பணியாற்றுவோருக்கு எதிரான லஞ்ச புகாரை, "மத்திய குற்றப்புலனாய்வு துறை(சி.பி.ஐ.,/ஏ.சி.பி.,) விசாரிக்கிறது. மாநில லஞ்ச ஒழிப்பு துறையை போன்றே, கைது நடவடிக்கை மற்றும் "விரிவான விசாரணை' நடவடிக்கையை சி.பி.ஐ.,யும் மேற்கொள்கிறது.
எனவே, மத்திய அரசு துறைகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் லஞ்ச அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிரான புகாரை, "கண்காணிப்பாளர், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (லஞ்ச ஒழிப்பு பிரிவு), மூன்றாம் தளம், சாஸ்திரி பவன், நெ.6, ஹாடோஸ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை -6' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும், கண்காணிப்பாளரை (044)- 28255 899 என்ற டெலிபோன் எண்ணிலும், டி.ஐ.ஜி.,யை (044)- 28206 200 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். "தகவல் அளிப்போரின் பெயர் மற்றும் பிற விவரங்கள் ரகசியம் காக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment