Tuesday, February 9, 2010

♥ : பிரிவுகள் பிரியத்துக்குரியவை !

பிரிவுகளை கொஞ்சம்
பிரியமாய் நேசியுங்களே.

வண்டுத் தேரேறி
பிரிந்து செல்லாத
மகரந்தத் துகள்களுக்கேது
மறுபிறப்பு ?

மேகத்தின் தேகம் விட்டு
பிரிய மறுக்கும்
ஈரத் துளிகளுக்கு
இங்கேது சிறப்பு ?

விதைகளை விட்டு
வெளியேறட்டும் கிளைகள்,

மூங்கிலை விட்டு
வெளியேறட்டும் இசைகள்,

பாறைவிட்டு
வெளிக்குதிக்கட்டும் சிலைகள்,

இதயம் விட்டு
வெளித்தாவட்டும் கலைகள்

தடுக்காதீர்கள்.

முட்டையோடான
பிரிவு
சிறகுச் சரித்திரத்தின்
முதல் சுவடு.

பிரியவிடுங்கள்,
இல்லையேல் பிரித்துவிடுங்கள்,
தொப்புள் கொடியை
யாரும்
தொடரவிடுவதில்லையே !

பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment